கனவுகள்::கருத்துக்கள்::கற்பனைகள்

February 21, 2007

சமஸ்கிருதமும் கணினியும் பத்து பொருத்தமா?

நெடுநாளாக இந்த தலைப்பில் சில விஷயங்கள் சேகரித்தும் ஆராய்ந்தும் வருகிறேன். தற்போது பத்ரியின் பதிவுகளில் எழுந்திருக்கும் சில கேள்விகளுக்கு ஒரு எளிய விளக்கம்.

முதலில் அசெம்பிளி மொழியில் தொடங்கி இன்று ரூபி மொழி வரை கணினி நிரல் மொழிகள் வளர்ந்து வந்திருக்கின்றன. ஒரு நிரைவான கணிமொழி நம் பேச்சுவழக்கைக் கொண்டு இயங்கும். மனிதர்களைப் போல் புரிந்துகொள்ளும் சக்தியுடையதாய் இருக்கும். ஆனால் அதற்கு இன்னும் வருடங்கள் பல ஆகும். அசெம்பிளி மொழியில் வெறும் சில எளிய கட்டளை தொகுப்புகளில் தொடங்கி இன்று ரூபியில் எளிய ஆங்கில பிரயோகங்களாக வளர்ந்திருக்கிறது. அதாவது அசெம்பிளி மொழியில் ஒரு சின்ன கூட்டல் செய்ய தோராயமாக இப்படி எழுதலாம்:

MOV A,2
MOV B,3
ADD ..

ஒரு சின்ன கூட்டலே இவ்வளவு வரிகளென்றால் இன்று இயங்கும் அனைத்து நிரல்களையும் உருவாக்க துவக்கப்பள்ளி முதல் இந்தியாவிலுள்ள அனைவரையும் மென்பொருள் எழுதச் சொன்னால்கூட மாளாது. இதனால் கொஞ்சம் மேம்பட்டு நம் சிந்தனையை பிரதிபலிக்கும் வகையில் பரவலாக பயன்படுத்தபடும் C++'ல் இதையே மெருகூட்டி இப்படி எழுதலாம்:

cout << 2+3;

இப்பொழுது பரவலாக பேசப்படும் கணிமொழி ரூபியில் இதையே - 2.plus 3 என்று எளிமையாக பேசுவதுபோல் எழுதலாம். இந்த எளிமை அடிப்படை விஷயங்களில் மட்டுமே. இன்னும் கணிமொழி என்பது நாம் சரளமாக பேசும் மொழியிலிருந்து மாறுபட்டே இருக்கிறது. சரி அப்ப என்னதான் சொல்ல வற்றேன்கறீங்களா?


ஒரு (கணி)மொழி என்றால் இரண்டு விஷயங்களுண்டு - syntax, semantics. இவை அம்மொழியின் இலக்கணம், விதிகள் இவற்றை குறிக்கின்றது. கணி அறிவியலாலர்கள் ஒரு நிரைவான கணிமொழி என்பது மனிதர்களாகிய நாம் பயன்படுத்தும் மொழியின் syntax, semantics'ஐ ஒத்து இருக்கவேண்டும் என்கிறார்கள். ஆதலால் நம் syntax, semantics ஒத்து ஒரு புதிய மேம்பட்ட சங்கேதத்தை (a higher level abstract construct) உருவாக்க முயற்சிக்கின்றனர். பின்பு இந்த சங்கேதத்திலிருந்து நாம் தெரிவு செய்யும் கணிமொழியில் நிரல்மூலங்களை (program source code) உருவாக்கும். இதன் மூலம் நாம் எளிமையாக நிரல்களை எழுதுவதுடன் C++, python, ruby என வேண்டிய கணிமொழியில் நிரல்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
இந்த மேம்பட்ட சங்கேதம்தான் தற்போது Extended Backus Naur Form (EBNF) எனப்படுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இது அப்படியே சமஸ்கிருதத்தின் இலக்கணத்தை பிரதிபலிக்கிறது. ஆதலால் சமஸ்கிருத மொழியை ஆராய்ந்து அம்மொழியின் ஞானத்தை பயன்படுத்த எத்தனித்துள்ளனர். வருங்காலத்தில் சமஸ்கிருதத்திலேயே அல்லது தமிழிலோ அல்லது வேறெந்த மொழியிலும் நிரல்கள் எழுத இயலும். ஆனால் இவ்வனைத்து நிரல்களும் சமஸ்கிருதத்தின் இலக்கணத்தை சார்ந்திருக்கும் என்றால் அது மிகையல்ல. மேலும் தெளிவு பெற கூகிளில் தேட சில கூறுகள்: EBNF, Parser - Generators,, Ruby, Panini's grammar, computational linguistics.
பாணினியின் அஷ்டத்யயி படித்தால் அதன் எளிமையின் மேதமை விளங்கும். இதனால் சமஸ்கிருதம் கணினிக்காக உருவக்கப்பட்டதென்றோ மற்ற மொழிகளில் இது போன்ற சிறப்புகள் இல்லையா என்று வாதம் செய்யவேண்டாம். ஏதோ இந்த இடத்தில் சமஸ்கிருதம் உபயோகமாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளலாம். கணிமொழி என்பது மனிதன் கணினி மூலம் தனக்கு வேண்டியதை செய்யும் நிரலை உருவாக்க பயன்படுத்தும் ஒரு மொழியே.
நிரல் எழுதுவது ஒரு முகமென்றாலும், மனிதனோடு ஊடாட பயன்படுத்தும் இடைமுகம் (Human Computer Interface/Interaction | HCI) என்பது வேறொரு முகம். :-) சமஸ்கிருதம் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிகளில் HCI'ல் பயன்படுத்த நிரைய சௌகரியங்கள் இருக்கின்றது. உதாரணத்திற்கு சில:
1. நம் மொழிகள் அனைத்தும் Monosyllabic - அதாவது ஒரு அட்சரத்திற்கு ஒரு ஒலி மாத்திரை. பொதுவாக வார்த்தைகள் ஒலிக்கும் போது silent letters கிடையாது. இதனால் பேச்சு உருவாக்கம் மற்றும் பேச்சு அறிதல் விஷயங்களில் சில நன்மைகள் பயக்கும்.
2. குறிப்பாக சமஸ்கிருதத்தில் மற்றும் இன்னபிற இந்திய மொழிகளில் ஒரு வாக்கியத்தில் noun, verb இத்யாதி எல்லாம் எந்த வரிசையில் வேண்டுமானாலும் இருக்கலாம். அத்தனையும் இலக்கணத்திற்கு உட்பட்டதுதான். இதனால் ஒரு இலக்கண திருத்தி (proofing tools) உருவாக்குவது எளிதாகிறது.
3. இந்திய மொழிகள் agglutinative வகையை வார்ந்தவை. இதனால் ஒரு வார்த்தையை புணர்ச்சி விதிகளின் உதவியுடன் அதன் கூறுகளை பிரித்து அவ்வார்த்தையின் அர்தத்தை புரிந்து கொள்ளலாம். This is very procedural and hence programmable!
இப்படி இன்னும் சில விஷயங்கள் உள்ளன. ஆனாலும் இதையெல்லாம் பயன்படுத்தி நம் மொழிகளுக்கான ஒரு முழுமையான நிரல் இன்னும் உருவாக்கபடவில்லை. வருத்தப் படவேண்டிய விஷயம்!

Labels: , , , ,

September 13, 2006

இந்தியா - டயாபிடீஸே வருக! : நியூ யார்க் டைம்ஸ் தலைப்புச் செய்தி

இன்று நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் சென்னையிலிருந்து வந்திருக்கு. இந்தியாவின் வளர்ச்சியால் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியர்களின் உணவுப் பழக்கத்தாலும் டைப் 2 டயாபிடீஸ் இந்தியாவில் பரவி வருவதாக இந்த கட்டுரை தெரிவிக்கிறது. எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கிட்டு நல்லா போர்வை இழுத்து போத்திக்கிட்டு தூங்குங்க, டயாபிடீஸ் வருதாம்ல.

Labels: , ,

July 17, 2006

புரான கால திரைப்படங்கள்

முந்தி மரத்தடியில் இட்டது. இப்போது இம்சை அரசன் வந்திருக்கிறது. ஆதலால் இந்த மீள்பார்வை . இனி அரகோனும் சீயானும்...

அரகோனும் சீயானும்

"Lord of the rings- the return of the king " (லாடர்) ஒரு வெறியுடன் முதல் வாரமே கொட்டகையில் போய் பார்த்த படம். இந்த படவரிசை அப்படி என்னை சுண்டியிழுத்தது. லாடர் முதல் தவணை[Fellowship of the ring] படம் வந்த பொழுது இது எதோ கிருத்துவ படமோ என்று நினைத்து டிவிடியில் பார்க்கலாம் என்று ஒதுங்கிவிட்டேன். ஆனால் படம் சக்கைபோடு போட்டபின் டிவிடி வெளியாகும் வரை காத்திருக்க இயலாமல் பதிவிறக்கம் [கண்டுகாதீங்க..] செய்து பார்த்தேன். அப்பொழுதே அடிமையாகிவிட்டேன் அதற்கு. அரகோனை முதலில் பார்த்தவுடன் எதோ மனதில் தோன்றியது ஆனால் பிடிபடவில்லை. இரண்டாம் தவனை பார்த்தபொழுதுதான் பொறி சிக்கியது. அட இது சீயான் மாதிரியே இருக்கு. கிட்டதட்ட ஒரே உயரம், முகவெட்டு, தாடை இன்னபிற எல்லாம் விக்ரம் போலவே இருந்தது.

லாடர் ஒரு புராணக்கதை, மிக பிரம்மாண்டமான, உள்ளத்தைக் கொள்ளையடிக்கும் ரம்மியமான காட்சிகளால் வடிக்கப் பட்டுள்ளது. தோள்வரை ஜடாமுடியுடன் அரகோன் மிக இயல்பாக இருப்பார். நம்ம ஊர் இதிகாசங்களைப் படமாக்கினால் ஜடாமுடி பின்கழுத்துவரைக்கும் ஒரு பெரிய பங்க் போலதான் இருக்கும். பாதி நேரம் டோபா என்று எழுதி ஒட்டியிருக்கும், செயற்கையாக இருக்கும். இதே பொதிகையில் சில வருடங்களுக்கு முன்னால் கலைஞரின் 'வாளுக்கு வேலி' தொடரில் [தேவதையில் கூட] நாசர் பாதி முதுகு வரை ஜடாமுடியுடன் திரிவார். இது மிக இயல்பாக இருக்கும். இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால் தமிழ்திரையின் சில குணாதிசயங்கள் புலப்படும். கோடம்பாக்கதில், நமது இதிகாசங்களைப் படமாக்கிய முயற்சிகள் எல்லாவற்றிலும் (கிட்டதட்ட) ஆதாரமாக கீழ்கண்ட விஷயங்களை கவனிக்கலாம்,

1. பிரம்மாண்டமான செட்டுகள்
2. வழக்கத்திற்கு அதிகமான பாடல்கள்
3. [மிக?] தோராயமான வரலாற்றுக் குறிப்புகள்
4. காதலே பிரதானமான கதையம்சங்கள்

காலப்போக்கில் பார்த்தோமானால், தமிழ் திரைப்படங்கள் தேசீயம் மற்றும் புராணக் கதைகளில் ஆரம்பித்து, சமகாலச் சித்திரங்கள் பின்பு காதல் தழைத்தோங்கி, இப்பொழுது அதன் பிடியில் இருந்து மீளமுடியாமல் சிக்கிவிட்டது. கிட்டதட்ட அறுபதுகளுக்கு பிறகு சரித்திரப் படங்கள் ஏனோ ஒதுக்கப்பட்டுவிட்டன. கடந்த முப்பது வருடங்களில் நடுநடுவே தோன்றும் ராமநாராயணன் வகை அபத்தங்களைப் புறந்தள்ளினால் சரித்திரம் மற்றும் புராணங்கள் சார்ந்த கருக்கள் கொண்ட படங்கள் மிக மிகச் சொற்பம் [சுத்தமாக பூஜ்யமோ?].

சரித்திரப் படங்கள் (இதிகாச மற்றும் மன்னராட்சி காலக் கதைகள்) எடுப்பதில் அப்படி என்னதான் கஷ்டம்? இதிகாச மற்றும் சங்ககாலக் கதைகள் மக்களுக்கு அத்துபடி. அவற்றை திரைக்கதையாக்கும் பொழுது கற்பனைக்கு இடம் மிகக்குறைவு(அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்). துல்லியமாக சரித்திரக் குறிப்புகளை, பிண்ணனியை ஆதாரமாக வைத்து அதே சமயம் ரசனையாகவும் திரைக்கதை எழுதுவதெல்லாம் நம்மவர்களுக்கு ஒலிம்பிக்சில் பதக்கம் வாங்குவதைக் காட்டிலும் சிரமம். வளமான அக்கதைகளைத் திரைக்கதையாக்க நல்ல தேர்ச்சி வேண்டும். உதாரணத்திற்கு, கதாநாயகன் நல்லவன், வல்லவன், ஏழை என்பதைச் சித்தரிக்க வேண்டும். இதனை கோடம்பாக்க சிற்பிகள் எடுத்தால் முதல் காட்சியில் கதாநாயகன் ஒரு பிச்சைக்காரனுக்கு பத்து பைசா போட்டுவிட்டு முடிந்தால் ஒரு பாட்டு பாடிவிட்டு வருவார். அடுத்து ஒரு சண்டைக்காட்சி வைத்து, அதில் ஒரு பத்துபேரை பறந்து பறந்து பந்தாடுவார். முடித்தவுடனே பரிட்சைக்குக் காசுகட்ட அல்லது அம்மாவின் [அல்லது உங்களுக்கு பிடித்த நெருங்கிய உறவைப் போட்டுகலாம்] சிகிச்சைக்குப் பணமில்லாமல் திண்டாடுவார். அவ்வளவுதான் இதை ஞாபகம் வெச்சுக்கவேண்டியது படம்பார்க்க வந்தவர்களுடய பொறுப்பு, ஏனென்றால் அதன்பிறகு கதாநாயகன் நல்ல ஷூ, விலையுயர்ந்த பைக் சகிதம் வலம்வருவார், கதாநாயகியை துரத்துவார். இப்படித் திரைக்கதை எழுதிப் பழகியவர்களுக்கு சரித்திரக் கதைகள் எல்லாம் ஓவர்லோடு.

நமது இதிகாசங்களில் நொடிப்பொழுதில் உருமாறுவது, அப்படியே ஒரு நூறு அடி எழும்பிப் பறந்துபோவது, அஸ்திர-சஸ்திரங்களைக் குறைந்தது ஐம்பது அடி ஏவி பைரோடெக்நிக்சுடன் சண்டை போடுவது, பிரம்மாண்டமான அரக்கர்கள் முதல் பூமிக்கடியில் பாதாளலோகம் வரை பல சைஸ்கள் பல காஸ்ட்யூம்கள் பல லொகேஷன்கள் எல்லாம் சகஜம். இவையெல்லாம் நம்பும்படியாக திரையில் காட்ட மிகுந்த பொருட்செலவும் அதைவிட முக்கியமாக தொழில்நுட்பமும் தேவை. தவிர நம்மூரில் கொஞ்சம் மார்க்கெடிங் திறமையும் குறைவு. திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒரு முப்பது ரூபாய் கொடுத்துப் படம் பார்த்துவிட்டுப் போகும் வாடிக்கையாளாராக ரசிகர்களைப் பார்த்துவந்ததினால் மார்க்கெட் விருத்தியாகமலே இருந்துவிட்டது. இதனால் தயாரிப்பாளர் எவ்வளவு செலவு செய்தாலும் ஓரளவுக்குமேல் பணம் ஈட்டமுடியாது. இதையெல்லாம்விட சுவாரசியமான காரணம் ஸ்டார் கலாச்சாரம், ஹீரோக்களும் அவர்கள் இமேஜும்.

உலகமயமாக்கல், மென்பொருள்துறையில் தொடங்கி இந்தியாவில் பெருகிவரும் தொழில்நுட்ப கலாசார முன்னேற்றம், இளைஞர்களின் வரவு, ஓங்கியுள்ள பணப்புழக்கம் இவையெல்லாம் இன்று சூழ்நிலைகளை மாற்றிவருகின்றன. சமீபத்தில் ஒரு ஜப்பானிய நிறுவனம் ராமாயணத்தை சித்திரப் படமாக பிரமாதமாக எடுத்துள்ளது. Universal, Sony Columbia, 20th Century போன்ற பெரிய பட நிறுவனங்கள் எல்லாம் தற்பொழுது இந்தியாவைப் பெரும் சந்தையாகப் பார்க்க தொடங்கியுள்ளன. ஸ்பெஷல் எ·பெக்டுகள், சித்திர படம் எடுப்பது எல்லாம் இப்பொழுது மென்பொருள் சார்ந்த சமாச்சாரமாகிவிட்டது. Pentasoft, VCL (Tata Elxsi), Toonz animation ஆகிய முன்னனி நிறுவனங்கள் இதில் அதிவேகமாக முன்னேறி வருகின்றன. Time-freeze, motion capture போன்ற யுக்திகள் பாடல்களில் வருகின்றன. கதைக்கு உபயோகமாகப் பயன்படுத்தினால் கற்பனை உலகின் எல்லையை மேலும் விஸ்தரிக்கலாம்.

வங்கிகளின் முதலீடு மற்றும் பெருகிய பணப்புழக்கம், NRI மார்கெட் இவையெல்லாம் திரைப்படங்களின் பட்ஜெட்டை விண்ணை நோக்கி உயர்த்தி வருகின்றன. மணிரத்னம், ஷங்கர்களின் வெற்றி புதிய தலைமுறையை தொழில்நுட்பத்துடன் நட்புடன் பழகவைத்துள்ளது. NSD, Film institute மற்றும் வெளிநாடுகளில் படித்துவிட்டு சினிமா எடுக்கவரும் இளைஞர்களின் வரவு அதிகரித்து வருகிறது. சினிமா வெரும் வியாபாரம் மட்டுமில்லை ஒரு கலைவடிவமமும் கூட. நமது ஞாபகக் கிடங்களில் புஸ்தகங்களில் தூங்கிவரும் வளமையான நமது பாரம்பரியத்தின் அடையாளங்கள் நவீன கலை ஊடகமான சினிமாவிலும் தடம்பதிக்க இயலாமல் தவிர்க்கும் தடைகள் உடைந்துவருகின்றன.

இன்றைய தமிழ் சினிமாவில் மிகவும் அரிதானது கதைதான். கணக்கு வழக்கே இல்லாமல் அபரிமிதமான அம்சங்களுடன் உன்னதமான கருத்துகளுடன் நிரம்பிய நம் பாரம்பரிய இதிகாசங்கள் திரைப் படைப்பாளிகளுக்கு ஒரு வரம். லாடர், பதுங்கும் புலி பாயும் சிறுத்தை போன்ற படங்களின் வெற்றி மற்றும் சின்னத்திரையில் சரித்திரத் தொடர்களுக்கு மக்களின் வரவேற்பு இவர்களின் கண்களைத் திறக்கட்டும். சில வருடங்களுக்கு முன் பொன்னியின் செல்வன் கதையைத் திரைக்குக் கொண்டுவருவதில் உள்ள சிரமத்தை விவரிக்கும்பொழுது கமலஹாசன், "இரண்டரை மணிக்குள்ளான திரைக்கதையில் இந்தக் கதையை அடைப்பது கஷ்டம்" என்று குறிப்பிட்டார். எதற்காக இரண்டரை மணி நேரம், மூன்று பகுதிகளாக ஏழரை மணியாக எடுக்கலாமே. தடைகள் இப்பொழுது சிந்தனையில் தான் உள்ளன. நாளை பிறக்கப் போகும் நண்டுசிண்டுகள் அரகோன், சீயான் போல ஒரு வந்தியத் தேவன், மாமல்லன், அபிமன்யு என்று சொல்லட்டுமே. நம் பாட்டிகளுக்குதான் வசதியில்லை கைவிரித்துக் கதை சொன்னார்கள், நாம் படம் காட்டலாமே.

June 28, 2006

Superman Returns = சூப்பர் சுப்புனி ரிடர்ன்ஸ் : விமர்சனம்

சுடச்சுட பிரிவியூ ஷோ பார்த்துட்டு வந்தேன். X-men 1 & 2 எடுத்த பிரையன் சிங்கர் இயக்கத்தில் புது பொலிவுடன் சூப்பர்மேன். சற்று நீளமான படத்தில் எல்லோரையும் காப்பாற்றும் சூப்பர்மேன்தான் இந்த படத்தையும் காப்பாற்ற ஏதாவது செய்யவேண்டும். சொத்தை படம்!
நெடுநாள் கழித்து திரும்பி வரும் சூப்பர்மேன் தான் விட்ட இடத்தில் இருந்து தன் வாழ்வை தொடங்க முயல்கிறார். அதே வேலை கிடைக்கிறது, அதே காதலிக்கும் ஆசைப்படுகிறார். படத்தின் ரசிக்கத்தக்க ஆனால் கடைசியில் புஸ்ஸாகும் வழக்கமான மொட்டை பாஸாக (எனக்குப் பிடித்த) கெவின் ஸ்பேசி, சூப்பர்மேனாக பிராண்டன் ரூத், லோய்ஸ் லேனாக கேட் பாஸ்வர்த் ஆகியோர் குறையில்லாமல் வேலை செய்திருக்கிறார்கள். பிரும்மாண்டமான சாகசங்கள் எல்லாம் பிரமிக்கும்படியாக காட்டுகிறார்கள். ஆனால் சரி இனி என்ன, எப்படி வில்லன் செக்மேட் செய்யப்போகிறான் என்று நாம் நிமிர்ந்து உட்காரும்பொழுது ஆட்டம்பாம் வெடிக்க நாம் காத்திருக்க சின்ன பிஜிலி வெடிப்பதுபோல் கிளைமேக்ஸ் சொத்தென்று முடித்திருக்கிறார்கள்.
படத்தில் நம்மூர் பாலிவுட் சொல்லப்போனால் கோலிவுட்டின் வாசம் நிறைய வீசுகிறது. வழக்கமான சூப்பர்ஹீரோ படம்போல் இல்லாமல் சற்று மண்வாசம் கலந்து இன்றைய ரசிகர்களை கவர சூப்பர்மேனின் உணர்ச்சிப்
போராட்டங்களை மையமாகவைத்து கதை பின்னப்போவதாக சொன்னார்கள். உணர்ச்சிகள்னா காதல் ரசத்த விடமுடியுமா? நம்ம கோலிவுட்ல மணிரத்னம் முதல் அனைவரும் சொல்லும் விஷயம் அதுதானே. சரி நிரைய காதல் சேர்த்து அப்படியே ஒரு தாய் செண்டிமெண்டும் சேர்த்துட்டா நம்மூர் ஃபார்முலா கிண்டிடலாம். ஆனா இங்கதான் ஹாலிவுட் ட்விஸ்ட்! தாய் செண்டிமெண்டிற்கு பதில் தந்தை செண்டிமெண்ட். என்ன நம்மூர் மாதிரி பாட்டுதான் மிஸ்ஸிங் (சொல்லமுடியாது ஹிந்தி/தமிழ் டப்பிங்கில் சேர்க்கலாம்). மத்தபடி இது சூப்பர்மேன் ரிடர்ன்ஸ் இல்லை, சூப்பர் சுப்புனி ரிடர்ன்ஸ்!

நீங்க கஜேந்திரா படம் பார்த்திருந்தா இந்த படத்தோட கதைக்கான க்ளூ உங்களுக்கு கிடைச்சாச்சு. உ-ம்: கஜேந்திராக்கு ஷாக் குடுத்தா அந்த கரண்டுக்கே ஷாக் அடிக்கும்! ஆனா கஜேந்திரா லெவலே வேற, புரட்சித்தலைன்னா சும்மாவா? :-D

April 21, 2006

கிலீவ்லண்ட் தியாகராஜ ஆராதனை

இந்த வாரம் 29வது தியாகராஜ ஆராதனை விழா கிலீவ்லண்டில் நிரைவுபெறுகிறது. ஆதலால் இந்த சனி, ஞாயிறு அங்கே செல்கிறேன், அளவான எதிர்பார்ப்புகளுடன். இரண்டு வருடம் முன்பு சென்றபோது ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் மரத்தடியில். இதோ மீண்டும் அந்த கட்டுரை. [நன்றி: மரத்தடி.காம்].


கிலீவ்லாண்ட் ஆ(ஹா)ராதனை
கிலீவ்லாண்ட் அருமையான ஊர். இருபதுகளில் தட்பவெப்பம், ஏரிக்கரையில் இருப்பதால் மெல்லிய குளிர்காற்று. நமதவர்கள் குறைவில்லாத இடம். இந்த ஆராதனை தொடர்ந்து 26-ஆவது வருஷம் நடக்கிறது. சுகானுபவம். என்ன செய்தேன் போன வருடம், தெரியவில்லை.

பிரும்மாண்டமான அரங்கம். உள்ளே நுழைந்தவுடன் நிரம்பி வழியும் கூட்டம் நம்மை பிரமிக்க வைக்கிறது. அரங்கத்தில் அருமையான சப்தம் சீராக வியாபித்திருக்கிறது (fantastic acoustics). கலைஞர்கள் எழுப்பும் ஒலியை மட்டும் தரும் துல்லியமான கம்பியற்ற ஒலிக்கருவிகள் (wireless mics etc...). வழ-வழவென்று மரத்தால் இழைத்த சுவர்கள். கூடவே மேலே உத்தரத்தில் எட்டு பிரும்மாண்ட உருளைகள் தொங்குகின்றன. இவை ஒலி எந்த ஒரு குறிப்பிட்ட திசையிலும் பிரதிபலிக்கப்பட்டு குவிந்துவிடாமலிருக்க அமைக்கப்பட்டிருந்தது. அரைவட்ட வடிவிலான மேடை, மேடை நோக்கி சார்பான மெத்தை இருக்கையமைப்பு (galary seating cushioned chairs) ரசிகர்கள் எந்த இடத்திலிருந்தும் மேடையை காண வசதியாக உள்ளது. மேடையின் பின்புறச் சுவரை வித வித அளவிலான புல்லாங்குழல்கள் அலங்கரிக்கின்றன. உத்தரத்திலிருந்து விளக்குகள் தற்கொலை செய்துகொல்லும் பாணியில் தொங்கிக்கொண்டு ஒளியைக் கொட்டுகின்றன. வித்வான்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு கஷ்டமும் இல்லாத குளிர்வசதி. களைப்பில்லாமல் ரசிகர்கள் நாள்முழுதும் கச்சேரிகள் அநுபவிக்க இத்தனை அரங்க ஏற்பாடுகள்.

ஏற்பாடுகளை செவ்வன செய்திருக்கும் நிர்வாகத்தாரை பாராட்டியே தீரவேண்டும். கலைஞர்களை மட்டும் கவனிக்காமல் வந்திருக்கும் அனைத்து தரப்பினரையும் உபசரித்து விருந்தோம்பல் செய்தனர். முக்கியமாக சுந்தரம் மற்றும் நிர்வாக தரப்பினர் வித்வான்களை கௌரவித்த விதம் மனதை நெகிழ்வித்தது. இப்படியே செய்தால் இந்த ஆராதனை இன்னும் நூறு வருடங்களுக்கு கோலாகலமாக நடைபெறும்.

அரங்கமைப்பு மற்றும் இதர நிர்வாகங்களைப் போல் கச்சேரிகளும் சிகரத்தை தொட்டிருந்தால் இந்த வாரமும் சென்றிருப்பேன். ஒரு நாள் பந்தயத்தில் சச்சின் சதம் அடித்து கூடவே திராவிட், கங்கூலி, செஹ்வாக் அரை சதம் அடிப்பது போல் எதிர்பார்த்தால், சுதா மற்றும் லால்குடி முப்பது நாற்பதிலேயே ஆட்டமிழந்து ஸ்ரீகாந்தன் மட்டும் இந்த வயதிலும் அசாத்திய எண்பது அடித்த உணர்வே மிஞ்சியது.

வந்து குவிந்திருந்த மக்கள் ஏராளம். ஆண்களைவிட பெண்கள்கூட்டம் அதிகமாக தென்பட்டது (வயதுக் கோளாறு!). ஒரே பட்டுப்புடவை சலசலப்பு! நம்மவர்கள் எப்பொழுதும் போல் எளிமையாகக் குழாய் சட்டைகளில் பிரவேசித்தனர். குழந்தைகளின் ஆரவாரமும் குதூகலமும் நம்மை கவர்ந்திழுத்தது. "சுதா வெயிட் பொட்டிருக்கா.." போன்ற கச்சேரி வம்புகளுக்குக் குறைவில்லை. மொத்தத்தில் திருவிழாக் கோலம். ஓரு குறை. ரசிகர்களின் நாகரீகம் சில நேரங்களில் கீழ்த்தரமாகவே இருந்தது. அரங்கினுள் பானம் மற்றும் தின்பண்டங்கள் அனுமதியில்லை என்று அரங்கின் வாசலில் மற்றும் பல இடங்களில் தெளிவாக அறிவிக்கப்படிருந்தது. ஆனால் பலபேர் இதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தலைமைப் பாதுகாப்பு அலுவலர் தலையிட்டு அரங்கை மூடவிடுவேனென்று எச்செரிக்கை விடுத்தபின்தான் ஓரளவு குறைந்தது. கச்சேரி நடுவே கிசுகிசுப்பதும், கண்ட நேரத்தில் எழுந்துபோவதும், ஓரிடத்தில் உட்காராதீர்கள் என்று கேட்டுக்கொண்ட பின்பும் அவர் தலை மறைந்தபின் அங்கு ஆக்கிரமிப்பதும் மனதை ஏதோ செய்தன. மாபெரும் விழாவில் இந்த சின்ன நெருடல்களை, புலம் பெயர்ந்து வேறோர் சமூகத்தில் குடியிருக்கும் இவர்களின் இசை பிரியத்தை மனதில் கொண்டு மறந்துவிடலாம்.

மேற்கத்திய ராக் அண்ட் ரோலின் புகழ்பெற்ற ஹால் ஆஃப் ஃபேம் (Rock n roll- hall of fame) குடியிருக்கும் அதே கிலீவ்லாண்டில் தியாகராஜ ஆராதனை நடப்பது இசையுலகில் அதன் பெருமையை மேலும் கூட்டுகிறது. வருடத்தின் இதே நேரத்தில் அமெரிக்காவில் இருக்க நேர்ந்தால் தவறாமல் காணவேண்டிய நிகழ்ச்சி இது. டிஸ்னிலாண்ட், நயாகரா பட்டியலில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். போன ஜென்மத்தில் ஒரு பசுமாடு தானம் செய்தால் ஒரு கச்சேரி காணும் பாக்கியம் கிடைக்குமேன்றால், நான் இரண்டரை மாடுதான் தானம் செய்திருக்கிறேன். இன்னுமொரு பத்து இருபது செய்திருக்கலாம்.

March 26, 2006

ஹாலிவுட்டில் ரஹ்மான்?

நேற்று டென்சல் வாஷிங்கடன், ஜோடி ஃபாஸ்டர் மற்றும் க்ளைவ் ஓவன் நடித்த INSIDE MAN படம் பார்த்தேன். படம் ஆரம்பித்தவுடன் ஒரு இனிமையான அதிர்ச்சி! திடிர்னு தலைவர் ரஹ்மானோட தில்சே படத்தின் சைய்ய சைய்யா பாட்டு அலறுகிறது. ஆமாங்க என்னால நம்பவே முடியலை. படத்தோட ஆரம்பத்திலயும், முடிவுலயும் இரண்டு தடவையும் சைய்யா சைய்யா பாட்டு தான் பின்னனி இசை. கொஞ்சம் ரீமிக்ஸ் இருந்தது. ரஹ்மான் ஹாலிவுட்டில் பால் காய்ச்சியாச்சு. யாம் பெற்ற இன்பம் இவ்வுலகமும் பெறட்டும்! <விவரங்கள் இங்கே>
தலைவரோட சைய்யா சைய்யா பாட்டுதான் பாலிவுட்டில் ரஹ்மானின் அடையாளமாக விளங்குகிறது. முந்தாநாள் தான் "லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" தலைவரோட இசையில் டொராண்டோல அரங்கேற்றம் பண்ணியாச்சு. ஆனா மந்தமான வரவேற்புதான் போல.
இன்சைட் மேன் படமும் நல்ல ஜோரா இருக்கு. வசனங்களும் ஆஹா ஓஹோ ரகம்தான். ஸ்பைக் லீ படம், வேற எதுவும் சொல்லலை, வேணும்னா இங்கு முன்னோட்டம் பாருங்க. படம் கண்டிப்பா பாருங்க.

March 20, 2006

V for வேண்டாண்டா!


Matrix Trilogy கொடுத்த வாகோஸ்கி சகோதரர்கள் எழுதி/தயாரித்த, அவர்களிடம் துனை இயக்குனராக பணியாற்றியவரே இயக்கியிருக்கும் படம் . வாகோஸ்கி சகோதரர்களின் புரட்சிகரமான சிந்தனைகளுடன் இன்னுமொரு படம் (?). கொட்டகையில் பார்த்தே ஆக வேண்டுமென்று வெறியில்லை என்றால் வட்டு வந்தவுடன் பாருங்கள் போதும்.

V for Vendetta

அதிகாரபூர்வ தளம்
IMDB'ல்

கதை: வாழையடி வாழையாக சொல்லப்படும் கொடுங்கோல் ஆட்சி நடத்துபவனுக்கு எதிராக தனிய்யொரு மனிதன் எழுப்பும் புரட்சிக்கதைதான். திரைக்கதையில் ஆங்காங்கே பளிச். தவிர கதை 2020'ல் நடப்பதால் வைரஸ் தாக்குதல், அரசின் 24*7 கண்கானிப்பு போன்ற சமாச்சாரங்கள் இருக்கின்றன. கனிசமான அளவு ரத்தம் வழிகிறது. புரட்சிக்கூவல் விடுக்கும் முகமூடி மனிதனாக ஹியூகோ வீவிங், எதேச்சையாக இந்த புரட்சிப்போரில் உள்ளிழுக்கப்படும் பதுமையாக நேடலி போர்ட்மென் என்று எல்லா பாத்திரங்களும் கச்சிதமாகப் பொருந்தி நடித்திருக்க்கிறார்கள். தேவையான அளவு கிராஃபிக்ஸ் ஜாலங்கள்.

படத்தின் முக்கிய குறையே புரட்சியின் பிறப்பை சித்தரிப்பதில்தான். எல்லா தேர்ந்த கலைஞர்களையும் எப்போதாவது ஒருமுறையேனும் சுண்டியிழுக்கும் இந்த கதைக்களம்தான் பிரச்சினையே. சமீபத்தில் ஆய்த எழுத்தில் மணிரத்தினமும் சமூகத்தில் புரட்சிக்கான பிரத்தியேக ஃபார்முலாவை சித்தரிக்க முயன்று சுட்டுக்கொண்டது நினைவில் இருக்கலாம். தற்போதைய இந்த படம் நன்றாக தொடங்கியபின் பின்பாதியில் முடிவை நோக்கியிட்டுச் செல்லும்போது தொய்ந்துவிடுகிறது. மக்களின் கவனத்தை பெற்ற பின்பு அரசின் எதிர்ப்பைத் தாண்டி எப்படி தன் பக்கம் இழுக்கிறான் கதாநாயகன் என்பது நம்பும்படியாக இல்லை. 2020'ல் நிலவும் தொழில்நுட்பத்தை சித்தரிப்பதில் நிரைய கோல் விட்டிருக்கிறார்கள், ஸ்பீல்பெர்க் இந்த விஷயத்தில் கெட்டி.
படத்தின் மூலம் காமிக்ஸ் புக் என்றாலும் நான் அந்த காமிக்ஸை படித்ததில்லை. ஆனால் அந்த காமிக்ஸை உருவாக்கிய ஆலன் மூர் இந்த படத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டார். ஆகையால் 'வீ ' வாகோஸ்கி சகோதரர்களின் 'வீ ' ஆவான். மொத்தத்தில் இந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்தமைக்காக பாராட்டலாம் ஆனால் படம் நிரைவாக இல்லை.